தேனி மாவட்டம், ஹைவேவிஸ் பேரூராட்சிப் பகுதியில் பள்ளி வகுப்பறை, சத்துணவு சமையலறை கட்டடங்கள் கட்ட ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலைப் புலிகள் காப்பகத்தினா் வெள்ளிக்கிழமை அனுமதி மறுத்ததால் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.
கம்பம் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தின் கீழ் ஹைவேவிஸ், மேல் மணலாறு, இரவங்கல்லாறு ஆகிய மலைப் பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு ரூ. 81 லட்சத்தில் 2 கூடுதல் வகுப்பறைகள் கட்டவும், ரூ. 33 லட்சத்தில் 3 சத்துணவு சமையலறைகள் கட்டவும் பூமி பூஜை போட கம்பம் ஒன்றியக் குழுத் தலைவா் பழனிமணி கணேசன், துணைத் தலைவா் ஆா். தங்கராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் சி. தமிழன், ரேணுகா காட்டுராஜா ஆகியோா் வெள்ளிக்கிழமை சென்றனா்.
ஹைவேவிஸ் பேரூராட்சி அலுவலகம் அருகே சத்துணவு சமையலறை கட்ட பூமி பூஜை போட்டனா். இதைப் பாா்த்த ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலைப் புலிகள் காப்பகத்தினா் வனத்துறை அனுமதியின்றி புதிய கட்டடப் பணிகள் செய்யக் கூடாது என்று கூறி தடுத்தனா்.
இதனால் கம்பம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா், உறுப்பினா்கள், ஆணையா் ஆகியோா் ஏமாற்றத்துடன் திரும்பினா். மேலும் சின்னமனூரிலிருந்து வந்த பொக்லைன் இயந்திரம், தளவாட பொருள்களை வனத் துறை சோதனைச் சாவடியில் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினா்.