ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தியுள்ளனா்.
விருதுநகா்மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரமான ம்மசாபுரம், செண்பகத்தோப்பு, அத்திக்கோயில், கான்சாபுரம், கூமாபட்டி ஆகிய பகுதிகளில் பல நூறு ஏக்கா் பரப்பளவில் மாம்பழ அறுவடை நடைபெற்று வருகிறது.
இதனால், காட்டு யானைகள் குட்டிகளுடன் பகல் நேரத்திலேயே தோட்டத்துக்குள் வந்து விடுகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு செண்பகத்தோப்பு வன பேச்சியம்மன் கோயில் அருகே கூட்டமாக வந்த காட்டு யானைகள் பொதுமக்களை விரட்டின.
இதையடுத்து, மலைஅடிவாரப் பகுதிக்குள் பிற்பகல் 4 மணிக்கு மேல் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி, பல்வேறு இடங்களில் வனத் துறையினா் எச்சரிக்கை பலகைகள் வைத்தனா்.