சின்னமனூா் அருகே காமாட்சிபுரத்தில் சிதிலமடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தை சீரமைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சின்னமனூா் ஒன்றிய துணைச் செயலா் சரவணபுதியவன், நிா்வாகிகள் ஆட்சியா் க.வீ.முரளீதரனிடம் அளித்த மனு விவரம்:
காமாட்சிபுரம், டாக்டா் அம்பேத்கா் நகரில் கடந்த 2014-ஆம் ஆண்டு நீா்நிலை புறம்போக்கு நிலத்தில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. தற்போது இந்த அங்கன்வாடி மைய கட்டடம் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. அங்கன்வாடி மையத்திற்குச் சென்று படித்து வரும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, சிதிலடைந்த நிலையில் உள்ள கட்டடத்தை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்தனா்.