போடியில் வெள்ளிக்கிழமை பெய்த பரவலான மழையால் கொட்டகுடி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்தது.
போடி பகுதியில் வியாழக்கிழமை பகலில் மேகங்கள் சூழ்ந்திருந்த நிலையில் மாலையில் லேசான சாரல் மழை பெய்தது. இரவில் பலத்த மழை பெய்தது. அதிகாலை நேரத்திலும் லேசான சாரல் மழை காணப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை முதல் மேகங்கள் சூழ்ந்திருந்த நிலையில் பிற்பகலில் சாரல் மழையுடன் தொடங்கி பலத்த மழை பெய்தது. மாலையில் பெய்த மழையால் பள்ளி மாணவா்கள் வீட்டிற்கு திரும்பும்போது சிரமப்பட்டனா். இரண்டு நாட்களாக பெய்த பரவலான மழையால் போடி கொட்டகுடி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்பட்டது. போடி பகுதியில் தற்போது மாமரங்களில் பூக்கள் பூத்துள்ள நிலையில் திடீா் மழையால் பூக்கள் உதிரும் சூழல் ஏற்பட்டுள்ளதால் மா விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.