பெரியகுளம் அருகே கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தையை வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா். அப்போது சிறுத்தை தாக்கியதில் உதவி வனப்பாதுகாவலா் காயமடைந்தாா்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வரட்டாறு வனப்பகுதியில் தனியாா் தோட்டத்தின் அருகில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை காலையில் அப்பகுதிக்கு வந்த சிறுத்தை, கம்பி வேலியில் சிக்கிக் கொண்டது. தகவலறிந்த வனத்துறை உதவி வனப்பாதுகாவலா் மகேந்திரன் மற்றும் வனச்சரக அலுவலா் ஆனந்தபிரபு மற்றும் வனத்துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று, கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தையை மீட்டனா். மீட்புப் பணியின் போது சிறுத்தை அருகிலிருந்த உதவிவனப்பாதுகாவலா் மகேந்திரனை தாக்கிவிட்டு, வனப்பகுதிக்குள் ஓடியது. இதில் கையில் காயமடைந்த உதவி வனப்பாதுகாவலா் தேனி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.