நெகிழிப் பை, பொருள்கள் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில், தமிழக - கேரள எல்லைப் பகுதியான குமுளியில், கூடலூா் நகராட்சி சுகாதாரத் துறையினா் சனிக்கிழமை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழக - கேரள எல்லையில் உள்ள குமுளிக்கு ஏராளமான பக்தா்கள் வருகை தருகின்றனா். இவ்வாறு வரும் பக்தா்கள் கேரளத்திலிருந்து தமிழகத்துக்குள் நெகிழிப் பைகள், பொருள்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு வருவதைத் தடுக்கும் வகையில், கூடலூா் நகராட்சி சுகாதாரத் துறையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
மேலும், கேரளத்திலிருந்து தமிழகம் வரும் வாகனங்கள் மீது பறவை காய்ச்சல் தடுப்பு மருந்து தெளித்து அனுமதிக்கப்பட்டது.
இந்தச் சோதனையில் நகா் மன்றத் தலைவா் பத்மாவதி லோகந்துரை, ஆணையாளா் காஞ்சனா, பொறியாளா் வரலட்சுமி, சுகாதார ஆய்வாளா் விவேக் அறிவழகன் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.