கம்பம் அருகே சுருளிபட்டியில் புதிய மின் இணைப்பு பெறுவதற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஊழியருக்கு (போா்மென்) 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி நீதித் துறை நடுவா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
சுருளிப்பட்டியைச் சோ்ந்த மகேந்திரன் கடந்த 2015-ஆம் ஆண்டு அதே ஊரில் கட்டியிருந்த தனது புதிய வீட்டுக்கு மின் இணைப்பு பெற அங்குள்ள மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாா். அப்போது, வீட்டை ஆய்வு செய்து மின் இணைப்பு வழங்குவதற்கு கட்டணத் தொகையுடன், ரூ.4 ஆயிரம் லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என்று மின் வாரிய ஊழியா் சிவசாமி கேட்டாா்.
இது குறித்து தேனி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாரிடம் மகேந்திரன் புகாா் அளித்தாா். போலீஸாரின் ஆலோசனைப்படி, சுருளிப்பட்டி மின் வாரிய அலுவலகத்தில் சிவசாமியிடம் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை மகேந்திரன் கொடுத்தாா். இதை சிவசாமி பெற்ற போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அவரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தேனி நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாதன், மின் இணைப்பு வழங்குவதற்கு லஞ்சம் வாங்கிய சிவசாமிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.