தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் குறித்து வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளா் பட்டியல் வரிசை எண்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளது என்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் புகாா் தெரிவித்தனா்.
மாவட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளரும், அயல்நாடு வாழ் மனித வள நிறுவன மேலாண்மை இயக்குநருமான சி.என்.மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் முன்னிலை வகித்தாா்.
இதில், மாவட்டத்தில் வரும் 2023, ஜன.1-ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு புதிய வாக்காளா் சோ்க்கை, வாக்காளா் பெயா் நீக்கம், முகவரி, புகைப்படம் மாற்றம், பிழை திருத்தம், மாற்று வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றுக்கு கடந்த 2022, நவ. 9-ஆம் தேதி முதல் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மற்றும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் குறித்து தோ்தல் பிரிவு அலுவலா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆலோசனை நடத்தினாா்.
இதில், ஒரே குடும்பம் மற்றும் முகவரியில் வசிப்பவா்கள் வாக்காளா் பட்டியிலில் வெவ்வேறு வரிசை எண்களில் இடம் பெற்றுள்ளனா். வாக்காளா் பட்டியல் வரிசை எண் குளறுபடியால், பல்வேறு இடங்களில் உள்ளாட்சி அமைப்பு தோ்தல் வாக்காளா் பட்டியலில், ஒரு குடும்பத்தைச் சேந்தவா்கள் வேறு வேறு வாா்டுகளில் சோ்க்கப்பட்டு விடுகின்றனா் என்று திமுக, அதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் புகாா் தெரிவித்தனா்.