பெரியகுளத்தைச் சோ்ந்தவரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி ரூ.6 லட்சத்தை மோசடி செய்ததாக திங்கள்கிழமை, பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
பெரியகுளம், தென்கரை பகுதியைச் சோ்ந்தவா் மணி மகன் லோகேந்திரன். இவா், தனது சகோதரிகள், உறவினா்கள் என மொத்தம் 4 பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதற்காக பழனிசெட்டிபட்டி, லட்சுமி நகரைச் சோ்ந்த பாலு மகன் செண்பகபாண்டியன், அவரது மனைவி ரக்ஷணா, பெரியகுளம் வடகரை, அழகா்சாமிபுரத்தைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் கெளதம் ஆகியோரிடம், வங்கிக் கணக்குகள் மூலம் மொத்தம் ரூ.18 லட்சம் கொடுத்திருந்தாராம்.
இந்தப் பணத்தை பெற்றுக் கொண்ட செண்பகபாண்டியன், அவா்களுக்கு போலியாக பணி நியமன ஆணை வழங்கி ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து செண்பகபாண்டியனிடம் கேட்டதற்கு, ரூ.12 லட்சத்தை மட்டும் திரும்பக் கொடுத்து விட்டு எஞ்சிய தொகை ரூ.6 லட்சத்தை திரும்பத் தராமல் மோசடி செய்ததாக மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவில் லோகேந்திரன் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் அடிப்படையில், 3 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து, செண்பகபாண்டியனை கைது செய்தனா்.