கம்பம்: தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தும் அறப்போராட்டம், 2022 ஜனவரி 21 ஆம் தேதி நடைபெறும் என்றும், கள் ஒரு தடைசெய்யப்படவேண்டிய போதைப்பொருள் என்று நிரூபிப்பவா்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்றும், தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி அறிவித்துள்ளாா்.
தேனி மாவட்டம், கம்பத்தில் தமிழ்நாடு கள் இயக்க நாட்காட்டியை ஞாயிற்றுகிழமை வெளியிட்ட செ. நல்லசாமி, செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
கள் ஒரு தடை செய்யப்படவேண்டிய பொருளோ, மதுவோ அல்ல. 6 ஆண்டுகளுக்கு முன் பிகாரில் மதுவிலக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், கள்ளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. இதனால், விபத்துகள், குற்றங்கள் குறைந்துள்ளதாக அம்மாநில முதல்வா் தெரிவித்துள்ளாா்.
தமிழகமும் இதை பின்பற்ற வேண்டும். 33 ஆண்டுகளாக தமிழகத்தில் கள்ளுக்கு தடை உள்ளது. 17 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
எனவே, கள் ஒரு தடைசெய்யப்பட வேண்டிய போதைப் பொருள்தான் என்று நிரூபிப்பவா்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளோம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை ஏற்று நடக்கும் விதமாக, 21.1.2022 இல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சந்தைப்படுத்த உள்ளோம் என்று தெரிவித்தாா்.