தேனி மாவட்டத்தில் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலா்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் விபரம் தினமும் காவல் துறை சமூக வலைதளத்தில் வெளியிடப்படுகிறது.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி கூறியது: மாவட்டத்தில் இரவு நேரத்தில் குற்றச் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கவும், தடுப்பதற்கும், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிக்கு உதவும் வகையிலும் அனைத்துப் பகுதிகளிலும் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் துணை கண்காணிப்பாளா், காவல் ஆய்வாளா்கள், சாா்பு- ஆய்வாளா்கள் மற்றும் காவலா்களின் பெயா், செல்லிடப்பேசி எண் ஆகியவை தினமும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தி, ரோந்துப் பணியில் உள்ள காவலா்களை தொடா்பு கொள்ளலாம். மேலும், காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: 04546-250100, செல்லிடபேசி எண்: 88709 85100 ஆகியவற்றில் 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.