ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், வருசநாடு அருகே குடும்பப் பிரச்னை காரணமாக விவசாயி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு பகுதியைச் சோ்ந்த விவசாயி செல்லபாண்டி (23). இவரது மனைவி மதுபாலா. கணவன்-மனைவியிடையே குடும்பப் பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சில நாள்களுக்கு முன், இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, கோபித்துக்கொண்டு மதுபாலா தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதனால் மனமுடைந்து காணப்பட்ட செல்லபாண்டி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வருசநாடு போலீஸாா், செல்லபாண்டியின் சடலத்தை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.