கணவருடன் சோ்த்து வைக்கக் கோரி தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை பெண் தனது 2 குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சோ்ந்தவா் பாலகிருஷ்ணன். இவரது மனைவி பாண்டிச்செல்வி. இவா்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனா். இவா்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கணவா், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பாலகிருஷ்ணன், பாண்டிச்செல்வியை பிரிந்து சென்றுவிட்டாராம். இது குறித்து பாண்டிச்செல்வி போடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை தனது இரு குழந்தைகளுடன் வந்த பாண்டிச்செல்வி, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.
இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா்.