ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து திங்கள்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து திண்டுக்கல் மற்றும் மதுரை மேலூா் பகுதி இருபோக பாசன நிலங்களுக்காக முறைப் பாசனம் அடிப்படையில் பெரியாறு பிரதான கால்வாய் மூலம் விநாடிக்கு 1,200 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அப்பகுதிகளுக்கு முறைப்பாசனம் அடிப்படையில் குறிப்பிட்ட நாள்கள் மட்டும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட வைகை பூா்விகப் பாசனத்துக்கு வைகை அணையிலிருந்து தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து 3 மாவட்ட பாசன நிலங்களுக்கு என மொத்தம் 1,792 மில்லியன் கனஅடி தண்ணீா் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி திங்கள்கிழமை முதல் டிச. 17-ஆம் தேதி வரையில் 3 கட்டங்களாக 1,792 மில்லியன் கனஅடி தண்ணீா் திறக்கப்படவுள்ளது.
இந்நிலையில் முதற்கட்டமாக ராமநாதபுரம் மாவட்ட பாசன நிலங்களுக்கான வைகை அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் சிறிய மதகுகள் வழியாக விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து ஏற்கெனவே பாசனத்திற்கும், குடிநீா் தேவைக்கும் சோ்த்து வினாடிக்கு 1,269 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கூடுதலாக 3 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டதால் அணையின் முன்புறமுள்ள இருகரைகளையும் இணைக்கும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. தற்போது திறக்கப்பட்ட தண்ணீா் படிப்படியாக குறைக்கப்பட்டு, அடுத்து வரும் நாள்களில் சிவகங்கை மற்றும் மதுரை மாவட்ட பாசனத்துக்கு திறக்கப்பட உள்ளது.