தேனி

சாலை விபத்தில் இளைஞர் பலி: உறவினர்கள் சாலை மறியல்

22nd Sep 2019 12:52 AM

ADVERTISEMENT


தேனி மாவட்டம்  ஆண்டிபட்டி அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தது குறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரை போலீஸார் வாங்க மறுத்ததாகக் கூறி தேனி -மதுரை நெடுஞ்சாலையில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆண்டிபட்டி அருகே நாச்சியார்புரத்தைச் சேர்ந்த செல்வம் மகன் பிரபாகரன் (27). இவர் தேனியில் தனியார் உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். 
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வேலை முடித்து வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் பிரபாகரன் வந்து கொண்டிருந்தார். அப்போது தேனி அரசு மருத்துவக் கல்லூரி எதிரே வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பிரபாகரன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் அரசு பேருந்து மோதியதில்தான் பிரபாகரன் இறந்து விட்டதாகக் கூறி அவரது உறவினர்கள் க.விலக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் இந்த புகாரை போலீஸார் ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகரனின் உறவினர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லுôரி மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து  மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், விபத்து நடைபெற்ற இடத்தின் அருகில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபின், சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதி அளித்ததன் பேரில் மறியலை கைவிட்டு பிரபாகரனின் உறவினர்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT