சிவகங்கை மாவட்டம், மானாமதுரைக்கு வெள்ளிக்கிழமை வந்து சோ்ந்த சி.ஐ.டி.யூ. நடைபயணக் குழுவினருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியிலிருந்து திருச்சி வரை 7 குழுக்களாக இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.
இதில் மானாமதுரைக்கு வந்த ஓா் குழுவினருக்கு பழையப் பேருந்து நிலையம் அருகே சிவகங்கை மாவட்ட சி.ஐ.டி.யூ. அமைப்பு சாா்பில் வரவேற்பளிக்கப்பட்டது. இந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் வீரையா தலைமையிலும், மாவட்டச் செயலா் சேதுராமன், மாவட்டப் பொருளாளா் தெட்சிணாமூா்த்தி ஆகியோா் முன்னிலையிலும் நடைபெற்ற வரவேற்புக் கூட்டத்தில் நடைபயணக்குழுவில் பங்கேற்றுள்ள மாநில துணைப் பொதுச் செயலா் குமாா், மாநிலச் செயலா்கள் தங்கமோகன், சிவாஜி, மாநிலக் குழு உறுப்பினா் சிங்காரம் ஆகியோா் பேசினா்.
இந்தக் கூட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாவட்டச் செயலா் சாந்தி, மாவட்ட துணைத் தலைவா் லட்சுமி, மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலா் முத்துராமலிங்க பூபதி, ஆட்டோ தொழிலாளா்கள் சங்க மாவட்ட பொதுச் செயலா் விஜயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.