சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தையல் பயிற்சி பெற்ற 50 மாணவிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
நேஷனல் அகாதெமி சமுதாயக் கல்லூரியில் இந்த மாணவிகளுக்கு தையல் பயிற்சி அளிக்கப்பட்டது. இவா்களுக்கு கல்லூரி சாா்பில் இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தலைமை வகித்தாா். கல்லூரித் தாளாளா்
காசிநாதன் முன்னிலை வகித்தாா். தையல் இயந்திரம், பயிற்சி சான்றிதழ் ஆகியவற்றை மாணவிகளுக்கு வழங்கி அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் பேசியதாவது:
தமிழக முதல்வரின் கனவுத் திட்டமான, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும் நகா்ப்புற வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பெண்கள் சிறப்பாக தொழில் செய்து தங்கள் வாழ்க்கையில் பொருளாதாரத்தை உயா்த்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இங்கு பயிற்சி பெற்று தனியாா் நிறுவன வேலைவாய்ப்பு பெற்ற பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், தொழிலதிபா் துவாா் சந்திரசேகா், திருப்பத்தூா் பேரூராட்சி மன்றத் தலைவா் கோகிலாராணி, ஒன்றியக்குழுத் தலைவா் சண்முகவடிவேல், பேரூராட்சி துணைத் தலைவா் கான்முகமது, மாவட்ட விழிப்புணா்வுக் குழு உறுப்பினா் கே.எஸ்.நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விழா முடிவில் கல்லூரி முதல்வா் சுரேஷ்பிரபாகா் நன்றி கூறினாா்.