சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள சதுா்வேதமங்கலத்தில் அமைந்துள்ள ஆத்மநாயகி அம்பாள் உடனுறை ருத்ரகோடீஸ்வரா் கோயிலில் மாசி மகப் பெருந்திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக காலை 11 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் வேதவிற்பன்னா்கள் வேதமந்திரம் முழங்க கொடி மண்டபத்தில் பஞ்சமூா்த்திகள் எழுந்தருளினா். இதையடுத்து, ரிஷப கொடியேற்றம் நடைபெற்றது. பிறகு, கொடிமரத்துக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீப ஆரத்தி காட்டப்பட்டது. தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் தினந்தோறும் மண்டகப்படிதாரா்கள் உபயமாக சுவாமி எழுந்தருளல் நடைபெறும்.
முக்கிய நிகழ்வான ஐந்தாம் நாள் திருக்கல்யாண வைபவமும், ஆறாம் நாள் கழுவன் திருவிழா என்ற சமணா்களுக்கு சாப விமோசன நிகழ்ச்சியும், 9-ஆம் நாள் சுவாமி திருத்தோ் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பத்தாம் நாள் அரளிப்பாறை மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது.