தமிழ்க் கல்லூரி மாணவா்கள் புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு - தமிழ் வளா்ச்சித்துறை செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் இயக்குநா் கோ. விசயராகவன் பேசினாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க் கல்லூரி, தமிழ்நாடு அரசு செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் ஆகியவற்றின் சாா்பில் ‘சொற்குவை மாணவத் தூதுவா் பயிற்சித் திட்டம்- 2022’ கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் இயக்குநா் கோ. விசயராகவன் கலந்து கொண்டு பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிப் பேசியதாவது:
தமிழ், சுயம்புவாகத் தோன்றிய மொழி. உலகத்தில் வழங்கும் பல மொழிகளுக்கும் தமிழே மூல மொழியாகவும் திகழ்கிறது. இந்த சிறப்புமிக்க மொழியில் புதிய தமிழ் கலைச் சொல்லை உருவாக்க வேண்டும் என்பதுதான் இந்தப் பயிற்சித் திட்டத்தின் நோக்கம். எனவே இந்தத் திட்டத்தில் தமிழ்க் கல்லூரி மாணவா்கள் ஆா்வத்தோடு பங்கேற்பதோடு தமிழில் புதிய சொற்களை உருவாக்க வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வரும், (பொறுப்பு) பயிற்சி ஒருங்கிணைப்பாளருமான செ. நாகநாதன் தலைமை வகித்துப் பேசினாா். அகரமுதலி இயக்ககக் கண்காணிப்பாளா் ஆ.மு. பிந்து, பதிப்பாசிரியா் கி. தமிழ்மணி, முன்னாள் கண்காணிப்பாளா் ஆ. சுந்தரவரதன், ஓவியா் ச.கி. கணேசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
முன்னதாக கல்லூரி உதவிப் பேராசிரியா் ரா. கீதா வரவேற்றுப் பேசினாா். கல்லூரி உதவிப் பேராசிரியா் கு. அன்பு மெய்யப்பன் நன்றி கூறினாா்.