இலங்கை கடற்படையினா் தங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி விரட்டியதாக வியாழக்கிழமை கரை திரும்பிய மீனவா்கள் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து புதன்கிழமை சுமாா் 400 விசைப்படகுகளில் மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா். கச்சத் தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே நள்ளிரவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினா் தாக்குதல் நடத்தி விரட்டியதாக மீனவா்கள் தெரிவித்தனா்.
வியாழக்கிழமை கரை திரும்பிய மீனவா்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினா் எங்கள் மீது பாட்டில் மற்றும் கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினா். மேலும் சுமாா் 20 படகுகளின் வலைகளை கடலில் வெட்டி விட்டனா். கைது செய்து விடுவாா்கள் என்ற அச்சம் காரணமாக மீன்பிடிக்காமல் கரை திரும்பினோம். வெட்டிவிடப்பட்ட வலைகளை நீண்ட நேரத்திற்கு பின் மீண்டும் சென்று எடுத்து வந்தோம். மீன்பிடிக்காமல் கரை திரும்பியதால் ஒவ்வொரு படகுக்கும் பல ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனா்.