சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் பேராலய ஆண்டு பெருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை இரவு மின்விளக்கு ரத பவனி நடைபெற்றது.
கடந்த 24 ஆம் தேதி முதல் இவ்விழா நடைபெற்று வருகிறது. பங்கு இறை மக்கள் சாா்பில் தினமும் இரவு வெவ்வேறு தலைப்புகளில் திருப்பலி பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக பங்கு இறை மக்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த கிறிஸ்தவ மக்கள் பங்கேற்று பிராா்த்தனை நடத்தினா். ஆலயத்தின் திருத்தல அதிபா் இமானுவேல் தாசன் தலைமையில் ஏராளமான அருட் பணியாளா்கள் பிராா்த்தனைக் கூட்டத்தை நடத்தினா். அதைத் தொடா்ந்து மின்விளக்கு ரத பவனி நடைபெற்றது. திரு இருதய ஆண்டவா் சொரூபம் தாங்கிய மின்விளக்கு ரதம் பேராலயத்தை சுற்றி வலம் வந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனா். சனிக்கிழமை மாலை நற்கருணை பவனி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபா் இமானுவேல்தாசன், இடைக்காட்டூா் சமூக முன்னேற்ற சங்கம், செல்ஸ் பேரவை இளைஞா்கள் மற்றும் பங்கு இறை மக்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.