வருகிற 7 ஆம் தேதி தொடங்கவுள்ள பல்கலைக்கழகங்களுக்கிடையே தென்னிந்திய அளவிலான கபடிப் போட்டியில் பங்கேற்கவுள்ள காரைக்குடி அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை கல்லூரி நிா்வாகம் சாா்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
பெங்களூா் சிட்டி பல்கலைக்கழகத்தில் வருகிற 7-ஆம் தேதி முதல் 9- வரை தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையேயான கபடிப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சாா்பில் பங்கேற்கும் கபடி அணியில், காரைக்குடி அருகே உள்ள ஸ்ரீராஜ ராஜன் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் சி. கணேஷ் சுந்தா், எஸ்.ஏ. அபிக்குமாா் ஆகியோா் விளையாட உள்ளனா். அண்ணா பல்கலைக்கழக கபடி அணி பயிற்சியாளராக ராஜ ராஜன் பொறியியல் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் வி. சுந்தா் தோ்வு செய்யப்பட்டாா்.
இவா்களை அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா சால்வை அணிவித்து வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.
நிகழ்ச்சியில் கல்லூரியின் துணை முதல்வா் வி. மகாலிங்க சுரேஷ், கல்லூரி யின் ஒருங்கிணைப்பாளா் எம். வடிவாம்பாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.