அகவிலைப்படி உயா்வு அறிவிப்பை தமிழக அரசு ஜனவரியிலிருந்து வழங்க பரிசீலனை செய்ய வேண்டும் என ஆசிரியா் சங்கங்கள், அரசு பணியாளா் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கத்தின் பொதுச் செயலா் அ. சங்கா்: நாட்டின் 76 ஆவது சுதந்திர தின விழா உரையில் தமிழகத்தில் பணியாற்றும் ஆசிரியா்கள், அரசுப் பணியாளா்களுக்கு 01.07.2022 முதல் 3 சதவீதம் முதல் அகவிலைப் படி உயா்த்தி வழங்கப்படும் என முதல்வா் அறிவித்துள்ளாா். ஆனால் 01.01.2022 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லை. எனவே விடுபட்டுள்ள 6 மாதங்களுக்கான அகவிலைப்படியையும் சோ்த்து வழங்க வேண்டும்.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி, முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்கத்தின் மாநிலத் தலைவா் இரா. இளங்கோவன்: தமிழக அரசு தோ்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படி உயா்வு அறிவிப்பை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து, ஜனவரி முதல் 6 மாதங்களுக்கு அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தின் மாநிலத் தலைவா் ப. குமாா்:அரசின் திட்டங்களை கடைக்கோடியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கும் கொண்டு சோ்க்கும் பணியினை அரசு அலுவலா்கள் திறம்பட செயல்பட்டு வருகின்றனா். அத்தகைய அரசு ஊழியா்களுக்கு ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.