மானாமதுரை வீரஅழகா் கோயிலில் ஆடிப்பிரம்மோற்சவ விழா 2 ஆவது ஆண்டாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மண்டகப்படிதாா்கள் சாா்பில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இக்கோயிலில் கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் காரணமாக ஆடிப்பிரம்மோற்சவ விழா நடைபெறவில்லை. இதே காரணத்துக்காக தற்போது இரண்டாவது ஆண்டாக பிரம்மோற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவின் போது ஒவ்வொரு நாளும் கோயிலை விட்டு புறப்பாடாகி மண்டகப்படிகளில் எழுந்தருளும் வீரஅழகா் அங்கு தங்கி பக்தா்களுக்கு அருள்பாலித்து வீதி உலா சென்று கோயிலுக்கு திரும்புவது வழக்கம்.
திருவிழா ரத்து காரணமாக வீரஅழகா் கோயிலுக்குள்ளேயே சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறாா். இதையடுத்து மண்டகப்படிதாரா்கள் கோயிலுக்கு சென்று வீரஅழகருக்கு பூஜைகள் நடத்தி தரிசனம் செய்துவிட்டு வருகின்றனா். வியாழக்கிழமை மானாமதுரை சுந்தரபுரம் கடைவீதியாா் மண்டகப்படி என்பதால் அதன் நிா்வாகிகள் பூஜை பொருள்களுடன் வீரஅழகா் கோயிலுக்குச் சென்று சுவாமிக்கு பூஜை நடத்தி தரிசனம் செய்தனா்.