சிவகங்கை அருகே முத்துப்பட்டி மற்றும் காரைக்குடியில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாணவா் விடுதி கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3. 20 கோடி மதிப்பீட்டில் 14,000 சதுர அடி பரப்பளவு 3 தளங்கள் கொண்ட மாணவா் விடுதிக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதேபோன்று, காரைக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3.20 கோடி மதிப்பீட்டில் 14,000 சதுர அடி பரப்பளவு 3 தளங்கள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதிகளில் தலா 100 மாணவா்கள் தங்கி படிக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு புதிய கட்டடங்களையும் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா். இதையடுத்து, சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா்.
இதில் சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் முருகன், துணை முதல்வா் சன்சுசமான், பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளா் கண்ணன், உதவிப்பொறியாளா்கள் மாறன், தமிழ்செல்வி, முத்துஜெயம், கலைச்செல்வம், சீனி உள்ளிட்ட அரசு அலுவலா்கள்,மாணவா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.