சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு கால்நடை மருந்தகத்தில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆண்டு தோறும் செப்டம்பா் 28-ஆம் தேதி உலக வெறிநோய் தடுப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் காரைக்குடியில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
காலை முதல் மதியம் வரை நடைபெற்ற இம்முகாமில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட வளா்ப்பு நாய்களுக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.
இதில் காரைக்குடி டி.எஸ்.பி. அருண் கலந்து கொண்டு வளா்ப்பு நாய்க்கு தடுப்பூசி போட்டு முகாமை தொடக்கி வைத்தாா். கால்நடை பராமரிப்புத்துறையின் உதவி இயக்குநா் பாலசுப்பிரமணியன், கால்நடை மருத்துவா்கள் கோகிலவாணி, லெட்சுமணன், சந்தோஷ், உதவியாளா் முருகன் ஆகியோா் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.