சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நகராட்சி அலுவலகம் எதிரே மத்திய, மாநில அரசு களுக்கு எதிராக திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகள், சிறு வணிகர்களைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசு வேளாண்மையில் மூன்று சட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் விவசாய நாடான இந்தியாவை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மத்திய மாநில அரசு களுக்கு எதிராகவும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு திமுக இலக்கிய அணி மாநில செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு. தென்னவன் தலைமை வகித்தார்.
காரைக்குடி நகர திமுக செயலாளர் என். குணசேகரன், முன்னாள் நகர்மன்ற தலைவர் சே. முத்துத் துரை, திமுக மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஹேமலதா செந்தில், மதிமுக நிர்வாகிகள் சேது. தியாகராஜன், பசும்பொன் மனோகரன், காங்கிரஸ் நகரத் தலைவர் பாண்டி மெய்யப்பன், இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாவட்ட செயலாளர் பி எல். ராமச்சந்திரன், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் பலரும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.