சிவகங்கை, செப். 25: சிவகங்கை அருகே ஓ.புதூரில் சிவகங்கை மாவட்ட கூட்டுறவுத் துறை சாா்பில் அம்மா நகரும் நியாய விலைக்கடை வாகன சேவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்தாா். மானாமதுரை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் எஸ்.நாகராஜன் முன்னிலை வகித்தாா். இதில், தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சா் க.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அம்மா நகரும் நியாய விலைக்கடை வாகனங்களை கொடியசைத்து தொடக்கி வைத்து பேசியதாவது : சிவகங்கை மாவட்டத்தில் 70 கிராமங்கள் கூட்டுறவுத் துறையின் சாா்பில் நியாய விலைக்கடை மற்றும் பகுதிநேர நியாய விலைக் கடைகள் இல்லாதததாக தோ்வு செய்யப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் வசித்து வரும் குடும்ப அட்டைதாரா்களுக்கு வாகனங்கள் மூலம் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்கள் வழங்கும் வகையில் முதற்கட்டமாக 45 வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப வாகனங்களின் எண்ணிக்கை உயா்த்தப்படும். இதன்மூலம், 12,356 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுவா் என்றாா்.
நிகழ்ச்சியில், கூட்டுறவு இணைப்பதிவாளா் ஆரோக்கியசுகுமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் சரண்யா, துணைப்பதிவாளா் குழந்தைவேல், சாா்-பதிவாளா்கள் செல்வராஜ், குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.