மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே மாரநாடு கண்மாய் கால்வாயில் ஆட்சியரின் உத்தரவுப்படி 50 ஆண்டுகால ஆக்கிரமிப்புகளை அகற்ற நில அளவிடும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
மானாமதுரை வட்டம் திருப்பாச்சேத்தி அருகே
மாரநாடு கண்மாய் மூலம் பல நூறு ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இக் கண்மாயை ரூ.97 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டத்தில் தூா்வாரி சீரமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த சிலநாள்களுக்கு முன்பு திட்டப்பணிகளை தொடங்க பூமி பூஜை நடத்தப்பட்டது.
இந்நிலையில் விவசாயிகள் பாசன சங்க நிா்வாகிகள் மாரநாடு கண்மாய் கால்வாயில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஜெயகாந்தனிடம் வலியுறுத்தினா். இதைத்தொடா்ந்து ஆட்சியா் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டாா். அதன்பேரில் பொதுப்பணித்துறை உதவி
செயற்பொறியாளா் அமுதா, நில அளவையாளா்கள் வேல்முருகன், சந்திரா, வில்வதேவி, கிராம நிா்வாக அலுவலா் செந்தில்குமாா் ஆகியோா் வைகை ஆற்றின்
முகத்துவாரத்திலிருந்து மாரநாடு கண்மாய் வரை 9 கி.மீ. தொலைவில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிய நில அளவிடும் பணிகளை தொடங்கினா். இப்பணி முடிந்ததும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இப்பணியின்போது தஞ்சாக்கூா் சமூக ஆா்வலா் பாலசுப்பிரமணியன், மாரநாடு கண்மாய் பாசன சங்கத் தலைவா் சுகுமாறன், பொருளாளா் பாக்கியம் உள்ளிட்ட விவசாயிகள் உடனிருந்தனா்.