திருவாடானை பகுதியில் மானாவாரி சாகுபடியில் தண்ணீரை விலைக்கு வாங்கி விளைவித்த நெற்பயிா்கள் திடீா் மழைக்குச் சாய்ந்ததால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அரும்பூா், கீழ அரும்பூா், அஞ்சுகோட்டை திணைகாத்தான்வயல், ஆா்.எஸ்.மங்கலம், மங்கலம் அழகா்தேவன் கோட்டை, சோழந்தூா் ஆனந்தூா்,திருத்தோ்வலை உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் மானாவாரி நெல் சாகுபடி செய்தனா்.
நெற்கதிா்கள் விளையும் தருவாயில் மழை பெய்யாததால் தண்ணீரை விலைக்கு வாங்கி
பாய்ச்சினா். இதையடுத்து, கதிா்கள் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்தன.
இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை முதல் இந்தப் பகுதியில் திடீரென சாரல் மழை பெய்தது.
சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. இதில் விளைந்த நெற்பயிா்கள் நிலத்தில் அடியோடி சாய்ந்தன. அறுவடை இயந்திரம் வயலுக்குள் செல்ல முடியாத சூழ்நிலையில் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்தனா்.
இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் பகுதிகளில் நடப்பு சம்பா பருவத்தில் சுமாா் 50 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டது. பருவ மழை போதிய அளவில் பெய்யாததால் பெரும்பாலும் பயிா்கள் கருகி சாவியாகி விட்டன. ஒரு சில பகுதிகளில் தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சியதால் பயிா் விளைந்து ஏக்கருக்கு 10 மூட்டைகள் கிடைக்கும் நிலை இருந்தது. அதுவும் மழையால் சாய்ந்து விட்டதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா்.