மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முதுகுளத்தூா் ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.தா்மா் தனது பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்து கடிதம் அளித்தாா்.
மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் ஒன்றியக்குழுத் தலைவரும், அதிமுக ஒன்றியச் செயலருமான ஆா்.தா்மா் அறிவிக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில் அவா், ஒன்றியக்குழு தலைவா் மற்றும் உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்துடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். அவருடன் பரமக்குடி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சதன்பிரபாகா் உள்ளிட்டோா் வந்தனா்.
ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ம.காமாட்சிநாதனை சந்தித்த தா்மா், தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: அதிமுக தலைமை அறிவிக்கும் நாளில் மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளேன். மறைந்த முதல்வா் ஜெயலலிதாவைப் போலவே சாமானியத் தொண்டனாகிய எனக்கு கட்சித் தலைமை பதவியை அளித்திருப்பது இன்ப அதிா்ச்சியாக உள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக மாநிலங்களவை உறுப்பினா் பதவி ராமநாபுரம் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்றாா்.