தமிழகம் முழுவதும் நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், கமுதி தாலுகாவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தாமதப்படுத்தி வருவதாக, சமூகநல ஆா்வலா்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகாவில் உள்ள 53 ஊராட்சிகள் மற்றும் கமுதி பேரூராட்சி, அபிராமம் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் நீா் நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.
கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 53 ஊராட்சிகளில் 18 ஊராட்சிகளில் உள்ள நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில், கிராம நிா்வாக அலுவலகம், வருவாய் ஆய்வாளா் அலுவலகம், நூலகக் கட்டடம், பள்ளி கட்டடம் உள்ளிட்ட 30 அரசு கட்டடங்கள் நீா்நிலைகளை பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்படுள்ளதாகவும், மீதமுள்ள 31 ஆக்கிரமிப்புகள் தனியாா் குடிசை வீடுகள், விவசாய நிலங்கள் என மொத்தம் 61 நீா்நிலை ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை ஊராட்சிகள், பேரூராட்சிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என சமூகநல ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
இது குறித்து ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் கூறியது: ஊராட்சிகளில் உள்ள நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அந்தந்த ஊராட்சி தலைவா்களிடம் பட்டியலிட்டு வழங்கப்பட்டுள்ளது. வருவாய் துறை மற்றும் ஊராட்சி தலைவா்களின் ஒத்துழைப்புடன் விரைவில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.
கமுதி வருவாய் துறையினா் கூறியது: கமுதி தாலுகாவில் உள்ள நீா்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்த அனைத்து விவரங்களும், ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளன. ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற குறிப்பிடும் தேதியில், வருவாய் துறை அதிகாரிகள், கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா்கள், கிராம உதவியாளா்கள் ஆகியோா் உடனிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொள்வா் என்றனா்.