ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள குருவாடி கிராமத்தில் சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கிருபாகரனுக்கு, தமிழ்நாடு கால்நடை வளா்ப்போா் சங்கத்தின் சாா்பில் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட முன்னாள் நீதிபதி கிருபாகரன் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் கால்நடை மேய்ச்சல் நிலங்கள் தனியாா்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதை மீட்கவும், ஆடு வளா்ப்போா் நல வாரியம் அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதில் மதுரை உயா்நீதிமன்ற நீதிபதிகள் சுவாமிநாதன், ஸ்ரீமதி, புகழேந்தி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.
கிராமியக் கலைகளை அழியாமல் பாதுகாத்து வரும் இசைக் கலைஞா்களை நீதிபதி சுவாமிநாதன் பாராட்டினாா். முன்னதாக, முன்னாள் தலைமை நீதிபதி கிருபாகரனுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
இதில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த ஆடு வளா்ப்போா் சங்கத்தினா் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.