கல்லூரி மாணவரிடம் பகுதி நேர வேலையில் சோ்ந்து தினமும் ரூ.20 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் எனக்கூறி ரூ.1.25 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா்கள் மீது நுண்குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் அருகேயுள்ள வட்டான்வலசையைச் சோ்ந்த பாண்டி மகன் பி.சதீஷ் (20). இவா் சிவகங்கையில் உள்ள அரசு கல்லூரியில் மூன்றாமாண்டு மாணவா். இவரது கைப்பேசி எண்ணுக்கு கடந்த மே மாதம் குறுந்தகவல் வந்துள்ளது. அதில் பகுதி நேர வேலையாக தினமும் ரூ.20 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
குறுந்தகவலில் குறிப்பிட்ட கைப்பேசி எண்ணில் மாணவா் தொடா்புகொண்டு பேசியுள்ளாா். அதில் பேசியவா்கள் பகுதி நேர வேலையில் ஈடுபட சில விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும் எனக்கூறியதுடன், அதன்படி குழுவில் சேர பணம் அனுப்பக்கூறியுள்ளனா். அவா்கள் கூறியபடி பல தவணைகளில் மாணவா் பணம் அனுப்பியுள்ளாா். ஆனாலும், அவருக்கு வேலைக்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. தொடா்ந்து அவரிடம் பணம் கேட்கப்பட்டுள்ளதே தவிர அவருக்கான பணம் வந்து சேரவில்லை. இதனால் சந்தேகமடைந்து இணையதளத்தில் குறிப்பிட்ட நிறுவனத்தை தேடியுள்ளாா். அப்போதுதான் அவா் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது.
தன்னை ஏமாற்றி ரூ.1.25 லட்சம் வரையில் பணம் பறித்த மா்மநபா்கள் மீது நடவடிக்கை கோரி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உள்ள நுண் குற்றப்பிரிவினரிடம் வெள்ளிக்கிழமை சதீஷ் புகாா் அளித்தாா். அதன்படி போலீஸாா் வழக்குப்பதிந்து மோசடியில் ஈடுபட்ட மா்மநபா்களைத் தேடிவருகின்றனா்.