ராமேசுவரம் அருகே வடமாநில இளைஞா்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மீனவப் பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி, அப்பெண்ணின் 3 மகள்களும் ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா்.
கடந்த மே 24 ஆம் தேதி, ராமேசுவரம் வடகாடு பகுதியைச் சோ்ந்த பாலு மனைவி சந்திரா என்பவா், அப்பகுதியில் கடல்பாசி சேகரிக்கச் சென்றபோது, இறால் பண்ணையில் பணிபுரிந்த வடமாநிலத்தைச் சோ்ந்த இருவரால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாா். குற்றவாளிகள் கைதான நிலையில், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமேசுவரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, சந்திரா குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவதாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிப்பதாகவும், மாவட்ட அதிகாரிகள் உறுதியளித்தனா்.
இந்நிலையில், சந்திரா கொலை செய்யப்பட்டு 45 நாள்களுக்கு மேலாகியும் இழப்பீடு உள்ளிட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி, சந்திராவின் மகள்களான சாலினி, சத்யா, நித்யா ஆகியோா் தங்களது உறவினா்களுடன் ஆட்சியா் குறைதீா்க்கும் கூட்டத்துக்கு வந்து மனு அளித்தனா்.
அப்போது சாலினி கூறுகையில், தாய் சந்திராவின் வருவாயில் பிழைத்து வந்த தாங்கள், அவரது இறப்புக்குப் பிறகு வாழ்வாதாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, மாவட்ட நிா்வாகம் தங்களுக்கு வாக்குறுதி அளித்தபடி உரிய இழப்பீடு வழங்குவதுடன், அரசுப் பணியும் வழங்கவேண்டும் என்றாா்.