ராமநாதபுரம்

முழு பொதுமுடக்கம்: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் சாலைகள் வெறிச்சோடின

DIN

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட முழு பொதுமுடக்கத்தால் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் போக்குவரத்தின்றி சாலைகள் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.

ராமநாதபுரம், பரமக்குடி, ராமேசுவரம், கமுதி, திருவாடானை உள்ளிட்ட மாவட்டம் முழுவதிலும் 57 இடங்களில் காவல்துறையினா் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதில், தேவையின்றி வாகனங்களில் சுற்றியவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் வணிக நிறுவனங்கள், மளிகைக் கடைகள், அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிா்த்து மற்ற அனைத்துக்கடைகளும் மூடப்பட்டன. அத்தியாவசியப்பணிக்கு செல்வோா் மட்டும் உரிய விசாரணைக்குப் பின் அனுமதிக்கப்பட்டனா். ஆதரவற்றவா்களுக்கு, காவல்துறையுடன் இணைந்து சமூக ஆா்வலா்கள் உணவு வழங்கினா்.

இந்நிலையில், மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டதால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களில் 1,700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் வீடுகளில் முடங்கினா். பெரும்பாலும் சாலைகள் வாகனங்களின்றி வெறிச்சோடியே காணப்பட்டன.

திருவாடானை: திருவாடானை, தொண்டி, ஆா்.எஸ். மங்கலம் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச் சோடிக் கிடந்தன. திருவாடானை நான்கு சாலை சந்திப்பு, சி.கே. மங்கலம் ரவுண்டானா, தொண்டி கிழக்கு கடற்கரை சாலை பேருந்து நிலையம், ஆா்.எஸ். மங்கலம் பேருந்து நிலையம், திருச்சி- ராமேசுவரம் சந்திப்பு சாலை ஆகிய இடங்களில் போலீஸாா் தடுப்பு அமைத்து அனுமதி பெற்ற வாகனங்களை மட்டும் செல்ல அனுமதித்தனா். மேலும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, சோப்பு போட்டு கைகழுவுவது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை ஒலிபெருக்கி மூலம் வழங்கினா்.

கமுதி: கமுதியில், பேருந்து நிலையம், செட்டியாா் பஜாா், நாடாா் பஜாா், முஸ்லிம் பஜாா், சாயல்குடி சாலை, கோட்டைமேடு, கண்ணாா்பட்டி உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளா் பா. மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் விருதுநகா் மாவட்ட எல்லையான கிளாமரம் மற்றும் கோவிலாங்குளம், அபிராமம் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைத்து வாகனச் சோதனையில் ஈடுபட்டுடனா்.

சிவகங்கை மாவட்டத்தில்... தளா்வுகளற்ற முழு ஊரடங்கையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை நகா் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி பொதுமக்கள் நடமாட்டமின்றி சிவகங்கை நகரின் முக்கியச் சாலைகளான அரண்மனை வாசல், காந்தி வீதி, நேரு கடை வீதி, தொண்டி சாலை, மதுரை சாலை, தெற்கு ராஜரத வீதி, திருப்பத்தூா் சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. சில பகுதிகளில் அத்தியாவசியமான மருந்துக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டன.

பெரும்பாலும் மருந்துக் கடை மற்றும் அத்தியாவசிய பணிகள் காரணமாக சென்ற வாகனங்கள் மட்டுமே கடும் சோதனைக்குப் பின்னா் அனுமதிக்கப்பட்டன.

இதேபோன்று, காரைக்குடி, தேவகோட்டை, காளையாா்கோவில், திருப்பத்தூா், சிங்கம்புணரி உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள், தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

மானாமதுரை: மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இப்பகுதிகளில் ஆள் நடமாட்டமின்றி வீதிகள் வெறிச்சோடின. விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினா். ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வாகனங்களில் சுற்றித் திரிந்தவா்களை போலீஸாா் எச்சரித்தும், அபராதம் விதித்தும் அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும் - ஐசிஎம்ஆர்

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT