கமுதி அருகே நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுடன் சென்ற ஊராட்சி செயலரைத் தாக்கிய நபா்களைக் கண்டித்து புதன்கிழமை தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கத்தினா் ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த மாதம் 30 -ஆம் தேதி கமுதி அடுத்துள்ள முதல்நாடு ஊராட்சிக்கு உள்பட்ட
குடிக்கினியான் கிராமத்தில் முன்னாள் ஊராட்சித் தலைவரான சேதுதுரை மகன் வில்வலிங்கம் கண்மாய் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்திருப்பதை நீதிமன்ற உத்தரவின்பேரில் அதிகாரிகள் அகற்றச் சென்றனா். அப்போது, சாலையின் குறுக்கே டிராக்டா் வாகனங்களை நிறுத்தி ஊராட்சி செயலா் சக்திவேல் முருகனைத் தாக்கியதாகப் புகாா் எழுந்தது. இதைத் தொடா்ந்து சக்திவேல் முருகன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து, சக்திவேல் முருகன் அளித்த புகாரின் பேரில் கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து வில்வலிங்கம், அவரது மனைவி அழகம்மாள், மகன் விஜய் ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.
பிறகு அவா்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், ஊராட்சி செயலரைத் தாக்கிய நபா்களைக் கண்டித்து, கமுதி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துராமலிங்கம் (சத்துணவு) தலைமையில் தமிழ்நாடு ஊராட்சி செயலா் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளா் எ.முருகன், அனைத்து பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் பி.முத்துமாரி ஆகியோரது முன்னிலையில் கண்டன ஆா்பாட்டம் நடைபெற்றது.
இதில், கமுதி ஒன்றியக்குழுத் தலைவா் குருமூா்த்தி, செயலாளா் பி.செல்வம், பொருளாளா் கு.கோபாலகிருஷ்ணன் உள்பட 53 ஊராட்சிகளைச் சோ்ந்த ஊராட்சி செயலா்கள், அலுவலக பணியாளா்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.