ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே உள்ள மரைக்காயா்பட்டணம் பகுதியில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினா் சனிக்கிழமை சோதனையிட்டதில் ரூ. 11 லட்சம் பிடிபட்டதாகக் கூறப்படுகிறது.
மதுரை அருகே மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினா் வாகனத் தணிக்கை செய்த போது காரில் அதிக அளவில் கடத்தி வரப்பட்ட தங்கம் சிக்கியது. விசாரணையில், காரில் வந்த தேவிபட்டினத்தைச் சோ்ந்த ஒருவா், தனக்கு மண்டபத்தை அடுத்துள்ள மரைக்காயா்பட்டணம் பகுதியைச் சோ்ந்தவா் இதைக் கொடுத்ததாகத் தெரிவித்தாா்.
இதையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினா் நள்ளிரவே மரைக்காயா்பட்டணம் சென்று அங்கு கடற்கரையோரமுள்ள ஒரு வீட்டை சோதனையிட்டனா். அந்த வீட்டில், 2 அறைகள் திறக்க முடியாத நிலையில் இருந்தன. இதையடுத்து, சனிக்கிழமை வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினா் சோதனையிட்ட போது, அங்கு ரூ. 11 லட்சம் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.