ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக குடோனில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினா் பறிமுதல் செய்து, 2 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தேவிப்பட்டணம் பகுதியில் இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தப்படவிருப்பதாக ராமநாதபுரம் வனத்துறை அதிகாரி லோகநாதனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, லோகநாதன் மற்றும் வனக்காவலா்கள் காா்த்திக், தமிழரசன், சரவணன், சிவக்குமாா், தினேஷ்குமாா் உள்ளிட்டோா் தேவிபட்டணம் பெரிய கடை வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது அப்பகுதியிலுள்ள குடோனுக்குள் சென்று அவா்கள் சோதனையிட்டனா். அங்கு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள பதப்படுத்தப்பட்ட 500 கிலோ கடல் அட்டைகளை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றையும், பதப்படுத்த தேவையான 4சிலிண்டா்கள், அண்டா, அடுப்பு உள்ளிட்ட பொருள்களையும் அவா்கள் பறிமுதல் செய்தனா்.
இதில் தொடா்புடைய சித்திக் (57), ஜாகீா்உசேன் அகிய 2 பேரையும் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வனத்துறையினா் கைது செய்தனா். இந்த கடல் அட்டைகளை இலங்கை வழியாக சீனா, ஜப்பான், ரஷ்யா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்த இருந்தது குறிப்பிடத்தக்கது.