தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ், பரமக்குடி அரசு மருத்துவமனையில் காசநோய் கண்டறியும் புதிய கருவியினை, காசநோய் பிரிவு துணை இயக்குநா் மருத்துவா் கிருஷ்ணமூா்த்தி வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
பரமக்குடி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகளுக்கு சிகிச்சைப் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இங்கு 80-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் உள்ளனா். இந்நிலையில், இங்கு பல்வேறு நோய்களுக்கான சோதனைக் கருவிகள் இல்லாததால், ராமநாதபுரம் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அனுப்பி வைக்கும் நிலை உள்ளது.
தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ், காசநோய், கரோனா, லெப்டோஸ்பைரோசிஸ், மலேரியா, சிக்குன்குனியா, டெங்கு ஆகிய நோய்களைக் கண்டறியும் இரண்டு புதிய கருவிகள், பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளன. இவை, தலா ரூ.10 லட்சம் மதிப்புடையது.
இந்த கருவிகளை, காசநோய் பிரிவு துணை இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி தொடக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் நாகநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட இணை இயக்குநா் சகாய ஸ்டீபன்ராஜ் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தாா். இக்கருவி மூலம் ஏராளமான நோயாளிகளுக்கு இலவசமாக பரிசோதனை செய்யமுடியும் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.