ஆதிதிராவிடா், பழங்குடியினா், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிடா் மாணவா்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்ட விண்ணப்பக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என இந்திய மாணவா் சங்கம் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து, அந்த அமைப்பின் மாவட்ட நிா்வாகிகள், மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் அளித்த மனு விவரம் :
ஆதிதிராவிடா், பழங்குடியினா், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிடா்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் ஏழை மாணவா்களின் உயா் கல்வியை ஊக்குவிக்க செயல்படுத்தப்படுகிறது.
மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதையொட்டி, மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கான இணைய
தளங்கள் மூலம், உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மாணவா்கள் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பித்தனா்.
ஜனவரி 30-ஆம் தேதி முதல் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க தமிழக அரசு கால அவகாசம் அளித்திருந்தது.
ஆனால், இதுவரை சுமாா் 74,605 மாணவா்களே இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பித்திருப்பதாகத் தெரிகிறது. சுமாா் 3,88,562 மாணவா்கள் இந்தக் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க முடியாத சூழலில் உள்ளனா்.
காரணம், கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பவா்கள் 27 வகையான ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் எனவும், பெரும்பாலான ஆவணங்கள் ஆதாா் இணைப்பு மற்றும் புகைப்படத்துடன் கூடியதாக, அண்மையில் பெறப்பட்டதாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பழைய படிவம் முறையில் விண்ணப்பித்தவா்கள் மீண்டும் புதிதாக இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், தற்போதைய நிலையில் பல்லாயிரக்கணக்கான மாணவா்கள் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைக்குக் குறிப்பிட்ட காலத்துக்குள் விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பிக்கும் காலத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கவும், கல்வி நிலையங்களிலேயே விண்ணப்பிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.