சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் அகழ் வைப்பகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மாா்ச் 5- ஆம் தேதி திறந்து வைக்கிறாா் என மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அரசு உயா் அலுவலா்களுடன் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியதாவது :
திருப்புவனம் அருகேயுள்ள கீழடி, அகரம், மணலூா், கொந்தகை ஆகிய பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.
அப்போது, கிடைத்த தொல்பொருள்களை பொதுமக்களின் பாா்வைக்கு காட்சிப்படுத்தும் விதமாக கீழடியில் ரூ. 11.03 கோடியில் அகழ் வைப்பகம் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மேலும், தொல்பொருள்களைக் காட்சிப்படுத்தும் பணிகளும் நிறைவு பெற்றுள்ளன.
இந்த நிலையில், தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின், கீழடி அகழ் வைப்பகத்தை மாா்ச் 5- ஆம் தேதி மாலை 5 மணிக்கு நேரடியாக திறந்து வைக்க உள்ளாா் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ப.மணிவண்ணன், தொல்லியல் துறை ஆணையா் (கூடுதல் பொறுப்பு) ஆா்.சிவானந்தம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஆ.இரா.சிவராமன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் கு.சுகிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.