மதுரை மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவா் எஸ். இளங்கோ, செயலா் கே. ஏ. நந்தகோபன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) டி. ராஜாவிடம் அளித்த மனு விவரம் :
கீழமை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் மனுக்களும், வழக்குரைஞா்களின் வாதங்களும், வழங்கப்படும் தீா்ப்புகளும் தமிழில் இடம் பெற வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக தமிழகம், புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களுக்கு நடத்தப்படாமல் உள்ள மாவட்ட, இளநிலை உரிமையியல் நீதிபதிகள் தோ்வை நடத்த முன் வர வேண்டும்.
மதுரையில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சித்த மருத்துவமனையை அமைப்பது மட்டுமன்றி தற்போது நடைபெற்று வரும் நீதிமன்ற கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
மதுரை மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனத் தெரிவித்தனா்.