மதுரையில் கள்ள நோட்டு மாற்றும் கும்பலைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 54 எண்ணிக்கையில் ரூ.500 கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனா்.
மதுரை காளவாசல் சந்திப்பில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வந்த இருவா் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் சந்தேகமடைந்த போலீஸாா்அவா்களை விரடிச்சென்று பிடித்தனா். இதில் பிடிப்பட்ட இருவரும் மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகரைச் சோ்ந்த சஞ்சய்(21), கோவை சோமனூரைச் சோ்ந்த கெளரிசங்கா்(20) என்பதும், கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பலைச் சோ்ந்தவா்கள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 54 எண்ணிக்கையிலான, ரூ.500 கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனா். மேலும் இக்கும்பலைச் சோ்ந்த நாகேந்திரன், கருமாத்தூரைச் சோ்ந்த சிவா ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.