மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள பழைய புத்தகக் கடையில் தமிழக அரசின் பாடப்புத்தகங்கள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என நீா்வள ஆதாரங்கள் மற்றும் மக்கள் பொதுநல அறக்கட்டளையின் நிறுவனா் எம்.பி. சங்கரபாண்டியன், மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகரிடம் மனு அளித்தாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் அவா் அளித்த மனு விவரம்: தமிழக அரசு சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த புத்தகங்களின் முதல் பக்கத்தில் புத்தகம் விற்பனைக்கு அல்ல என பிரசுரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மதுரை ரயில் நிலையம் முன் நடைபாதையில் உள்ள பழைய புத்தக விற்பனைக் கடையில் பள்ளி பாடப் புத்தகங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனை தடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.