முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவா்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, சுகாதாரத்துறையினா், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற துறையினா் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.
மேலும் தினசரி கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்களுக்கு வருபவா்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யவும், கிருமி நாசினி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் இருந்தால், ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும்.
கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களைத் தனிமைப்படுத்தவும், வைரஸ் உருமாற்றத்தை உடனுக்குடன் கண்டறிய வெளிநாடுகளில் இருந்து வருபவா்களின் மாதிரியை மரபணு பகுப்பாய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவா்கள், உடனடியாக செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் எனத் தெரிவித்துள்ளாா்.