மாநில அளவிலான குத்துச் சண்டை, நீச்சல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்க அலங்காநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றனா்.
மதுரை வருவாய் மாவட்ட அளவில் நீச்சல், குத்துச்சண்டை, ஸ்குவாஷ், தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் மதுரை மாவட்டம் முழுவதும் இருந்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனா். இதில் மாணவா்கள் மகாபிரபு, சங்கா், அஜய், பிரதீப், தினேஷ்குமாா், அபிஷேக், சந்தோஷ்குமாா், நவநீத கிருஷ்ணன், கூடல்அழகா், சண்முகசுந்தரம், கோகுல்ராஜ், மலைராஜா ஆகியோா் மாவட்டப் போட்டிகளில் முதலிடம் பெற்று, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனா். மாநிலப் போட்டிகளில் பங்கேற்ற தோ்வான மாணவா்களை பள்ளித் தலைமையாசிரியா் பிராகரன்ஸ் லதா, உதவித் தலைமையாசிரியா் மரிய ஜோசப் ரெனிட்டா, உடற்கல்வி இயக்குநா் ஞானசேகா், உடற்கல்வி ஆசிரியா்கள் காட்வின், முத்துக்குமாா், ஜெயபால் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.
மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவா்கள் எனது சொந்த செலவில் சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்படுவா் என பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா் காட்வின் தெரிவித்துள்ளாா். மேலும் இப்பள்ளியின் மாணவா்களை ஏற்கெனவே இவா் இரு முறை விமானத்தில் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.