உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வலையபட்டி கிராமத்தில் மழையின்போது இடி விழுந்ததில் இரண்டு மாடுகள் உயிரிழந்தன.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. அதேபோல் உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வலையபட்டி பகுதியிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய மழை பெய்தது.
இந்த நிலையில் வலையபட்டியைச் சேர்ந்த ஆதி முத்து மகன் காசி தங்களுக்கு சொந்தமான இரண்டு மாடுகளை மேய்ச்சலுக்காக ஆற்றுப் பகுதியில் கட்டி வைத்திருந்தார். அப்போது இடி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 2 மாடுகளும் உயிரிழந்தன.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
மாட்டு உரிமையாளர் காசி இறந்த மாட்டின் மதிப்பு ரூ.2 லட்சம் என தெரிவித்தார். மேலும், தமிழக அரசு இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.