மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 12 ஆயிரத்து 184 வழக்குகளில் சுமுகத் தீா்வு காணப்பட்டு, ரூ.17.93 கோடிக்கு இழப்பீடு வழங்க சமரசம் செய்யப்பட்டது.
மதுரை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் மாவட்ட நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி பி.வடமலை தலைமையில் மாவட்டம் முழுவதும் 22 அமா்வுகளில் விசாரணை நடைபெற்றது.
தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் பசும்பொன் சண்முகையா, போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதிகா, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி அனுராதா, தொழிலாளா் நலநீதிமன்ற நீதிபதி முத்துசாரதா, சாா்பு-நீதிபதி ஆஷா கௌசல்யா நந்தினி, மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு வழக்குகளுக்கான நீதிமன்ற நீதிபதி சண்முகவேல்ராஜ், குற்றவியல் நீதித்துறை நடுவா்கள், உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்றனா்.
மொத்தம் 13 ஆயிரத்து 55 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 12 ஆயிரத்து 184 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன. இந்த வழக்குகளில் ரூ.17 கோடியே 93 லட்சத்து 1 ஆயிரத்து 746 இழப்பீடு வழங்குவதற்கு சமரசம் செய்யப்பட்டது.