கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து விவேகானந்த கேந்திரம் வரை இருசக்கர வாகனப் பேரணி நடத்த அனுமதி வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரியைச் சோ்ந்த விஷ்ணு தாக்கல் செய்த மனு:
சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி விவேகானந்த கேந்திரம் பல்வேறு விழிப்புணா்வு முகாம்கள், மாணவா்களுக்கான போட்டிகள், விடுதலைப் போராட்ட வீரா்கள் குறித்த நிகழ்வுகள், போதைப்பொருள் தவிா்ப்பு தொடா்பான விழிப்புணா்வு நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு களியக்காவிளையில் இருந்து விவேகானந்தா கேந்திரம் வரை இருசக்கர வாகன தேசியக்கொடி பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளோம். கல்லூரி மாணவா்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வுக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு மீதான முந்தைய விசாரணையின்போது, ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த மனு நீதிபதி வி.சிவஞானம் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இரு சக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டாா். காவல்துறையினா் பேரணியை ஒழுங்குபடுத்தி தேவையான பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.